காரைநகர் கடற்படை தளத்திற்கு பொதுமக்களின் காணிகள் உள்ளடங்கலாக 50 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீட்டு பணி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பலர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்டவர்கள் அங்கு குழுமினர்.
நிலஅளவை திணைக்கள அதிகாரி, காணி அளவீடு செய்ய வேண்டுமென விடாப்பிடியாக நின்றார். அரச உத்தியோகத்தரான தான், அரச கடமையை செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.
தனிப்பட்ட அவருக்கு எதிரான போராட்டம் அல்ல இது, அரசின் காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நில அளவை திணைக்கள அதிகாரி விடவில்லை. இந்த காணிக்குள் தனியார் காணி மட்டுமல்ல, கடற்படைக்குமுரிய காணியுமுள்ளது. ஆகவே அளவீடு செய்ய வேண்டும். அப்படி எதிர்ப்பு இருந்தால், பிரதேச செயலாளருடன் பேசி இந்த பிரச்சனையை தீர்க்கும்படியும், காணி அளவீடு செய்யுமிடங்களில் இப்படி நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், நிலஅளவை திணைக்கள அதிகாரிகளை பொதுமக்கள் எதிரியாகத்தான் பார்ப்பார்கள் என்றார்.
அதன்போது, சிறிதரன் எம்.பி, காணி உரிமையாளர்கள் உங்களின் முன்பாக நிற்கிறார்கள். அவர்களின் காணிகளை அளவீடு செய்ய முடியாது. இதுவரை அளவீட்டிற்கு வரும் அதிகாரிகள், இந்த நிலைமையை புரிந்து கொண்டு சென்று விடுவார்கள். ஆனால், நீங்கள்தான் அளவீடு செய்ய வேண்டுமென நிற்கிறீர்கள். அளவீடு நடக்கும் எல்லா இடங்களிற்கும் நாம் வந்து எதிர்ப்பு தெரிவிப்போம். அதை மீறி மக்களின் காணிகளை அளவீடு செய்ய வேண்டுமென முயன்றால், மக்கள் விரோதியாகத்தான் பார்ப்பார்கள் என்றார்.
பிரதேச செயலகத்தில் இந்த விடயத்தை ஏன் தீர்க்க முடியாது என்பதைம் மக்கள் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவரான அங்கஜன் இராமநாதன் காணி சுவீகரிப்பிற்கு இரகசியமாக எப்படி துணை போகிறார், காணி விடயங்களை ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிற்கு கொண்டு வராமல் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திற்கு தாரைவார்க்க அவர் செயற்படும் முறை பற்றி விளக்கமளித்தனர்.
இதையடுத்து, நிலஅளவைத்திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.

