தாய்லாந்தில் காதலர் தினத்தில் யானைகள் மீது அமர்ந்து ஊர்லமாக சென்றபடி, 52 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
சோன்பூரி மாகாணத்தில் உள்ள நூங் நூச் பூங்காவில் ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு, யானைகள் மீது காதலர்கள் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 100 ஜோடிகள் ஒவ்வொரு வருடமும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளினால் 52 ஜோடிகளே இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
இன்று, நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிய கலைஞர்கள் நடனம், இசை வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, யானைகளின் மீது பயணித்தபடியே 52 காதல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் யானையில் இருந்தபடி திருமண பத்திரத்தில் கையெழுத்திட்டதை, உள்ளூர் நிர்வாக அதிகாரியொருவர் மேற்பார்வை செய்தார்.



