பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை, தாய் மற்றும் தாயின் கள்ளக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீடு தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மொஹமட் நஷாஸ் ரியாஸ் (08) என்ற சிறுவன் என்றும், பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
சிறுவனின் தாயார் கடந்த 08 ஆம் திகதி இரவு தனது கள்ளக் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கணவரும் குழந்தையை தனியாக விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்றிரவு குழந்தை வீட்டில் தனியாக இருந்ததாகவும், அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததாகவும், தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடு தீப்பிடித்தபோது சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் தாயார் சிறிது காலமாக ஒரு இளைஞனுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கணவர் போதைப்பொருள் வியாபாரி என்றும், அவர் ஐஸ் போதைக்கு அடிமையானவர் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குழந்தையின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டில் பெற்றோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கள்ளக்காதலனுக்கு ஏற்கெனவே பிடியாணைகள் இருந்ததன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.




