பொகவந்தலாவ கிவ் தோட்டத்தின் கீழ்பிரிவில் உள்ள மலசலகூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம்(03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
சிறுவனின் தந்தை வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் கைகழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்றபோது, அங்கு நீர் நிரம்பியிருந்த குழியில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
தனது மகனைக் காணவில்லை என்பதை அறிந்த தந்தை, இரண்டு முறைக்கு மேல் கூக்குரலிட்டும் மகன் வராததால், வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, சிறுவனின் பாதணிகள் மிதப்பதைக் கண்டுள்ளார்.
பின்னர், சிறுவனை மீட்டு டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், சிறுவன் ஏற்கனவே மரணித்திருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
கிவ் தமிழ் வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்




