செவ்வாய்க்கிழமை தெற்கு ஒஸ்திரிய நகரமான கிராஸில் உள்ள ஒரு மேல்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறைந்தது ஒன்பது பேரைக் கொன்றார். இது நாட்டின் நவீன வரலாற்றில் மிக மோசமான பாடசாலை துப்பாக்கிச் சூடாகும்.
தாக்குதல் நடத்தியவரும் இறந்துவிட்டதாகவும், அவர் தனியாக செயல்பட்டார் என்ற அனுமானத்தில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 30 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பாடசாலை மாணவர்கள் என்று ஒஸ்திரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
கொலையாளியை பொலிசார் பகிரங்கமாக அடையாளப்படுத்தவில்லை, ஆனால் ஒஸ்திரிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவர் என்று கூறியது.
“கிராஸில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த வன்முறை ஒரு தேசிய சோகம், இது நமது முழு நாட்டையும் ஆழமாக உலுக்கியுள்ளது” என்று ஒஸ்திரிய ஜனாதிபதி கிறிஸ்டியன் ஸ்டாக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தப் பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குரியர் மற்றும் சால்ஸ்பர்கர் நாச்ரிச்ச்டன் செய்தித்தாள்கள் சந்தேக நபரை 22 வயது முன்னாள் மாணவர் என்று அடையாளம் கண்டன.



